ஓலா, ஊபருக்குப் போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ – கமிஷன் இல்லாத கூட்டுறவு டாக்ஸி சேவை டெல்லி, குஜராத்தில் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

இந்தியாவின் டாக்ஸி சேவைத் துறையில் ஓலா (Ola), ஊபர் (Uber), மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆதரவுடன் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்தச் செயலி தற்போது டெல்லி மற்றும் குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியங்களில் தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தை (Pilot Runs) தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, இச்சேவை இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

பாரத் டாக்ஸியின் தனிச்சிறப்புகள்
பாரத் டாக்ஸியை, சஹாரிகா கூட்டுறவு சங்கம் (Sahakarika Co-operative) என்ற அமைப்பு இயக்குகிறது. இது இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை தளம் ஆகும். இதன் உறுப்பினர்கள் அனைவரும் கார் ஓட்டுநர்களே.

ஓலா, ஊபர் போன்ற தனியார் செயலிகளில் ஒவ்வொரு பயணத்திற்கும் (Ride) ஒரு கமிஷன் தொகையை நிறுவனம் எடுத்துக்கொள்ளும். ஆனால், பாரத் டாக்ஸியில் வாடிக்கையாளர் செலுத்தும் மொத்தப் பணமும் கார் ஓட்டுநருக்கே செல்லும். இதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.

மேலும், தனியார் செயலிகளைப் போல, தேவை அதிகரிக்கும் நேரங்களில் (Peak Hours) அதிக கட்டணம் (Surge Pricing) வசூலிக்கும் முறை இதில் கிடையாது. எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரே கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் லாபத்தை அளிக்கும்.

இந்தச் சேவையானது முழுக்க முழுக்க கார் ஓட்டுநர்களால் இயக்கப்படும் ஒரு தளமாக இருக்கும். சோதனை ஓட்டம் தொடங்கப்பட்ட 10 நாட்களிலேயே டெல்லி மற்றும் சௌராஷ்டிராவில் 51 ஆயிரம் ஓட்டுநர்கள் இதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் நேஷனல் இ-கவர்ன்மென்ட் பிரிவு இந்த முன்னோட்டத்தை எடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் இதன் சேவை தற்போது கிடைக்கிறது. ஐஓஎஸ் தளத்திலும் கூடிய விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாரத் டாக்ஸி செயலி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.