தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. தொழில் ரீதியாகவும், உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளரும் நகரமான ஓசூரில், பெங்களூருவுக்கு அருகாமையில் இருப்பதால், டாடா, ஓலா, டிவிஎஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு மேலும் உந்துதல் அளிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் விவரங்கள் மற்றும் கிராமங்கள்
ஓசூர் – பேரிகை – பாகலூர் – சூளகிரி பகுதிகள் இணையக்கூடிய இடத்தில் விமான நிலையத்தைக் கட்டமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகளைக் கையாளும் வகையில் இதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்தை அமைக்க மொத்தம் 2,979 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 845 ஏக்கர் நிலம் ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமானது. மீதமுள்ள நிலம் தனியாரிடம் இருந்து (விவசாய நிலங்கள் உட்பட) கையகப்படுத்தப்பட உள்ளது. ஓசூர் தாலுகாவில் 10 கிராமங்களும், சூளகிரி தாலுகாவில் சில கிராமங்களும் இதில் அடங்கும். முக்கியமாகப் பலவனப்பள்ளி, முதாலி, அடவனபள்ளி, தேசபள்ளி, அட்டூர், காருபள்ளி, நந்திமங்கலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்த பிறகு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பான அரசாணை வெளியிட்டவுடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். இந்தப் பணிகளைப் பிப்ரவரிக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓசூர் விமான நிலையம்: 12 கிராமங்களில் இருந்து 2,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டம்!


