மனிதர்களுக்குப் பதில் AI-ஐப் பணிக்கு அமர்த்தியது தவறு! சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) அதிகாரிகளின் பகீர் ஒப்புதல்!

உலகின் முன்னனி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தனக்கே தலைவலியாக மாறியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளைப் பணிக்கு அமர்த்திய முடிவு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

AI ஏஜெண்டுகளின் குழப்பமும் அதிகாரிகளின் வெளிப்படையான வருத்தமும்
சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘ஏஜெண்ட்ஃபோர்ஸ்’ (Agentforce) என்ற பெயரில் AI ஏஜெண்டுகளை உருவாக்கி வழங்கியது. ஆனால், இவை நிஜமான வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. ஒரு AI ஏஜெண்டிற்கு 8-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை (Instructions) வழங்கும்போது, அது விதிகளைப் பின்பற்றத் தவறி குழப்பமடைகிறது. “ஓராண்டிற்கு முன்பு இந்த மாடல்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம், ஆனால் இப்போது அது குறைந்து விட்டது” என்று நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சனா பரலேக்கர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவையில் ஏற்பட்ட பின்னடைவும் புதிய முடிவுகளும்
AI ஏஜெண்டுகளின் செயல்பாடு குறித்து விவிட் (Vivint) போன்ற பெரிய நிறுவனங்கள் புகார்களைத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் சற்று வித்தியாசமான கேள்விகளைக் கேட்டால், AI ஏஜெண்டுகள் பதிலளிக்க முடியாமல் திணறுவதுடன் அவற்றின் முக்கிய நோக்கத்திலிருந்தே விலகிச் செல்கின்றன. இதனால் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தற்போது தனது AI பயன்பாட்டு வேகத்தைக் குறைத்துவிட்டு, ஏற்கனவே உள்ள லார்ஜ் லாங்குவேஜ் மாடல்களை (LLM) மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மனித மூளைக்கு மாற்றாக AI-ஐ முழுமையாக நம்புவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.