கூகுளின் ‘எமர்ஜென்சி லொகேஷன்’ சேவை இந்தியாவில் அறிமுகம்: முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் தொடக்கம்!

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ‘எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ்’ (Emergency Location Service – ELS) என்ற உயிர்காக்கும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அவசரகாலச் சூழலில் ஒருவர் சிக்கிக்கொள்ளும்போது, அவரால் போன் செய்து தனது இருப்பிடத்தை விவரிக்க முடியாத நிலையிலும் இந்தச் சேவை பேருதவியாக இருக்கும்.

அவசரகால அழைப்பின் போது தானாகவே பகிரப்படும் இருப்பிடத் தகவல்
உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து 112 போன்ற அவசரகால உதவி எண்களை டயல் செய்தால் போதும். போன் இணைக்கப்பட்ட உடனேயே, உங்கள் துல்லியமான இருப்பிடத் தகவல் (Location) தானாகவே காவல்துறை அல்லது ஆம்புலன்ஸ் போன்ற அவசரக்கால உதவி மையங்களுக்குச் சென்றுவிடும். அருகில் உள்ள வைஃபை (Wi-Fi), ஜிபிஎஸ் (GPS) மற்றும் மொபைல் நெட்வொர்க் சிக்னல்களைப் பயன்படுத்தி, 50 மீட்டருக்குள் மிகத் துல்லியமாக இருப்பிடத்தைக் காட்டும் திறன் இதற்கு உண்டு. இந்த வசதி எப்போதும் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்காது; நீங்கள் அவசரகால எண்ணை டயல் செய்யும் போது மட்டுமே இது தானாகவே ஆக்டிவேட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் இல்லை, தனி ஆப் தேவையில்லை
இந்தச் சேவையின் சிறப்பம்சமே இதன் எளிமைதான். இதற்காகப் பயனர்கள் தனியாக எந்தவொரு செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. ஆண்ட்ராய்டு 6 (Android 6.0) அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இயங்கும் அனைத்து போன்களிலும் இது தானாகவே இருக்கும். மேலும், இந்தச் சேவைக்குக் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது.

நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ள உயிர்காக்கும் தொழில்நுட்பம்
உத்தரப் பிரதேசத்தில், அங்குள்ள UP112 அவசர உதவி மையத்துடன் இணைந்து இந்தச் சேவை முதன்முதலாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அவசரகால அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. விபத்துகள், உடல்நலக் குறைவு அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு, அவர்கள் பேச முடியாத நிலையிலும் விரைவாக உதவி கிடைப்பதை இந்தத் தொழில்நுட்பம் உறுதி செய்கிறது.