இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் நடத்திய விரிவான ஆய்வில், சுமார் 1,750 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 424 இடங்களில் செல்போன் நெட்வொர்க் வசதி அறவே இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்வதால், அங்கு சிக்னல் கிடைக்காமல் போவது அவசர கால மீட்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைப் பாதிப்பதாக என்எச்ஏஐ கவலை தெரிவித்துள்ளது.
இந்தச் சவாலை எதிர்கொள்ள, மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உடனடியாகத் தலையிட வேண்டும் என்று என்எச்ஏஐ கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகப் பசுமை வழிச் சாலைகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சிக்னல் வசதியை மேம்படுத்தத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு மற்றும் விபத்து எச்சரிக்கை
சிக்னல் வசதியை மேம்படுத்துவதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் என்எச்ஏஐ பரிந்துரை செய்துள்ளது. விபத்துகள் அதிகம் நேரிடக்கூடிய இடங்கள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் ஆபத்தான வளைவுகள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி (SMS) மூலம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று டிராய்-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான இடங்கள் மற்றும் தரவுகள் தொலைத்தொடர்புத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு அவசரக் காலங்களில் உதவி பெறுவது எளிதாகும் என்பதோடு, விபத்துகளையும் பெருமளவு குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் ‘நோ சிக்னல்’: நெட்வொர்க்கை மேம்படுத்த தொலைத்தொடர்புத் துறைக்கு என்எச்ஏஐ கோரிக்கை!


