இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவஸ்தைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய டோல் வசூல் முறை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த செயற்கைக்கோள் முறை அமலுக்கு வரும். இது ‘மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ’ (MLFF) அடிப்படையில் இயங்கும். இதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வாகன எண் பலகையை அடையாளம் காணும் கேமராக்கள் (ANPR) பயன்படுத்தப்படும்.
பயண நேரக் குறைப்பும் பொருளாதார நன்மைகளும்
வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போதே, டோல் பிளாசாக்களில் நிற்காமலேயே தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். இது FASTag உடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் டோல் பிளாசாக்களில் காத்திருப்பு நேரம் ‘பூஜ்ஜியம்’ ஆக்கப்படும். இது பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதோடு, எரிபொருள் செலவில் சுமார் ₹1,500 கோடி வரை மிச்சப்படுத்தும். மேலும், அரசுக்கு ₹6,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், டோல் கட்டணத் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இந்திய நெடுஞ்சாலைப் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும் மாற்றுவதுடன் சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க உதவும்.
FASTag முறையில் மாற்றம்: செயற்கைக்கோள் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம்!


