ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஜூன் 2026 முதல் ரீசார்ஜ் கட்டணம் 15% உயர்வு?

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வரும் ஜூன் 2026-க்குள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ஜெஃப்ரீஸ் (Jefferies) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

ஜெஃப்ரீஸ் அறிக்கையும் 15% கட்டண உயர்வும்
கடந்த 2024 ஜூன் மாதத்தில் செல்போன் கட்டணங்கள் 15 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த உயர்வு வரவுள்ளது. வரும் ஜூன் 2026-க்குள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15% வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ (IPO) வெளியீடு மற்றும் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையின் மதிப்பினை உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்களை அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றவும், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்கவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் மற்றும் அதிக டேட்டா கொண்ட திட்டங்களையே பயன்படுத்துவதால், நிறுவனங்கள் டேட்டா இல்லாத பழைய ரீசார்ஜ் திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு வருகின்றன. இதன் மூலம் நிறுவனங்களின் லாபம் 2027-ஆம் ஆண்டில் 16 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நோக்கித் திரும்பும் வாடிக்கையாளர்கள்
தனியார் நிறுவனங்களின் இத்தகைய தொடர் கட்டண உயர்வுகளால், நடுத்தர வர்க்க மக்கள் மீண்டும் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் தனது கடன் நிலுவைகளைச் சமாளிக்க 2030-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக 40% வரை கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.