வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - ITR) செய்வதற்கான புதிய விதிகள், காலக்கெடு மற்றும் அதன் நன்மைகள் குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கேள்வி 1: எனது வருமானம் வரி வரம்பிற்குள் வரவில்லை என்றாலும் நான் ஏன் ஐடிஆர் (ITR) தாக்கல் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன்? பதில்: நீங்கள் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்றாலும், முறையாகக் கணக்கு தாக்கல் செய்வது எதிர்காலத்தில் உங்களுக்குப் பல வழிகளில் உதவும். கடன் வசதிகள்: வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடன் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுடைய ஐடிஆர் ஆவணங்கள் கடன் ஒப்புதலை எளிதாக்கும். உங்கள் வருமானத்தில் தேவைக்கு அதிகமாக வரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டிருந்தால், அதை அரசிடமிருந்து திரும்பப் பெற இது அவசியம். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விசா கோரி விண்ணப்பிக்கும் போது, முறையான நிதி ஆவணங்களாக ஐடிஆர் படிவங்கள் பெரிதும் உதவக்கூடும். சுயதொழில், பங்குச்சந்தை அல்லது சொத்து பரிமாற்றங்களில் ஏற்படும் நிதி இழப்புகளைப் பிற்காலத்தில் வரும் லாபத்துடன் நேர் செய்ய இது பயன்படுகிறது. மருத்துவச் செலவுகளுக்கு ரூ.25,000 வரை வரி விலக்கு பெறவும், 80டி பிரிவின் கீழ் சலுகைகளைப் பெறவும் இது வழிவகை செய்கிறது.
கேள்வி 2: யாரெல்லாம் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்? பதில்: வருமான வரிச் சட்டத்தின் 139(1) பிரிவின் கீழ், பின்வரும் சூழ்நிலைகளில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்: ஒரு நிதியாண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காகத் தனக்கோ அல்லது பிறருக்கோ ஒரே பரிவர்த்தனையாக ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவு செய்தவர்கள். ஓராண்டில் மின்சாரக் கட்டணமாக ஒரே முறையிலோ அல்லது மொத்தமாகவோ ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாகச் செலுத்தியவர்கள். வங்கியில் உள்ள தங்களது நடப்புக் கணக்கில் (Current Account) ஒரே நிதியாண்டில் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைப் பரிமாற்றம் செய்தவர்கள்.
கேள்வி 3: ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-4 வரை உள்ள படிவங்கள் யாருக்குப் பொருந்தும்? பதில்: தனிநபர்களின் வருமான ஆதாரங்களின் அடிப்படையில் படிவங்கள் பிரிக்கப்பட்டுள்ளன: ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2: மாதச் சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், கணக்குத் தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத தனிநபர்கள், சொத்து விற்பனை லாபம் மற்றும் முதலீட்டு வட்டி வருமானம் கொண்டவர்களுக்கானது. ஐடிஆர்-3: தணிக்கை தேவைப்படாத வணிகர்கள், இந்து கூட்டுக் குடும்பத் தலைவர்கள் (HUF), வாடகை வருவாய் ஈட்டுவோர், பங்குச்சந்தை மற்றும் ஊக வணிகத்தில் ஈடுபடுவோர், மற்றும் கூட்டாண்மை (Partnership) நிறுவனங்களின் பங்காளர்களின் பயன்பாட்டிற்கானது. (குறிப்பு: பார்ட்னர்ஷிப் அல்லது வணிக வருமானம் இல்லாதவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது). ஐடிஆர்-4: ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில்முறை வருவாய் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கானது. சம்பளம், வட்டி, விவசாயம் மூலம் ரூ.5,000 வரை மற்றும் மூலதன ஆதாயமாக ரூ.1.25 லட்சம் வரை பெறுவோர் இதைத் தேர்வு செய்யலாம்.
கேள்வி 4: இந்த ஆண்டு ஐடிஆர்-4 படிவத்தில் என்னென்ன புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன? பதில்: புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் அதுகுறித்த விவரங்களை இதில் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். மேலும், உங்களுடைய முதலீட்டு விவரங்கள், உங்களிடம் இருக்கும் இரண்டு வீடுகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை வருமானங்கள், காலியிடங்கள் மற்றும் கட்டிடங்களின் வருவாய் விவரங்களை இதில் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். (வாடகை வருமானங்களை ஐடிஆர்-1 படிவத்திலும் குறிப்பிட வேண்டும்).
கேள்வி 5: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசித் தேதிகள் எவை? பதில்: அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே இறுதி நாள் கிடையாது. படிவங்களுக்கு ஏற்ப தேதிகள் மாறுபடுகின்றன: ஜூலை 31: ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 தாக்கல் செய்யும் மாதச் சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தணிக்கைக்குள் வராத பொதுவான வரி செலுத்துவோருக்கான கடைசி நாள். ஜூலை 31, 2026: கணக்குத் தணிக்கை (Audit) முறைக்குக் கீழ் வரும் வருமான வரி செலுத்துவோர் தங்களது படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள். ஆகஸ்ட் 31: தணிக்கை அவசியம் இல்லாத, ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் தொழில் செய்வோருக்கான இறுதி நாள். நவம்பர் 30: சர்வதேச வர்த்தகப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு, விலை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியவர்களுக்கான கடைசித் தேதி. டிசம்பர் 31, 2026: உரியக் காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள், காலதாமதக் கட்டணத்துடன் (Belated Return) கணக்குத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள். மார்ச் 31, 2027: தாக்கல் செய்த கணக்குகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதைத் திருத்தி மறுபரிசீலனை செய்யப்பட்ட அறிக்கையைச் (Revised Return) சமர்ப்பிக்கக் கடைசி நாள்.
கேள்வி 6: காலக்கெடுவுக்குள் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? வரி செலுத்தத் தேவையில்லாதவர்களுக்கும் அபராதம் உண்டா? பதில்: ஆம், நீங்கள் வரி வரம்பிற்குள் வராவிட்டாலும், குறிப்பிட்ட தேதிக்குப் பின் தாமதமாகத் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். வருமான வரிச் சட்டம் பிரிவு 234எஃப்-ன் படி, காலக்கெடு முடிந்த பின் தாக்கல் செய்வோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனினும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ள சிறிய வரிசெலுத்துவோருக்குத் தாமதக் கட்டணமாக ரூ.1,000 மட்டுமே வசூலிக்கப்படும். மேலும், நிலுவையில் உள்ள வரிகளுக்கு வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் வரி வரம்பிற்குள் வராவிட்டாலும், குறிப்பிட்ட தேதிக்குப் பின் தாமதமாகத் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.