இனி வாட்ஸ்அப்பிலேயே இலவச சட்ட ஆலோசனை! மத்திய அரசின் ‘நியாய சேது’ சேவை அறிமுகம்!

மக்களுக்கு அடிப்படை சட்ட உதவிகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் ‘நியாய சேது’ (Nyaya Setu) என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு மெசேஜில் அனைத்து சட்ட ஆலோசனைகளும்
இந்த AI தொழில்நுட்பம் கொண்ட சாட்போட் (Chatbot) மூலம் பொதுமக்கள் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம், நிலத் தகராறுகள், திருமணச் சிக்கல்கள், குடும்ப வன்முறை மற்றும் வணிகம் சார்ந்த சட்ட விளக்கங்களை இலவசமாகப் பெறலாம். சட்ட மற்றும் நீதி அமைச்சகம் இது குறித்துத் தெரிவிக்கையில், “சட்ட உதவி இனி ஒரு மெசேஜில் கிடைக்கும்; நியாய சேது உங்கள் வாட்ஸ்அப்பிற்கே நீதியின் எளிமையைக் கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை மற்றும் தற்போதைய தொழில்நுட்ப நிலை
இந்தச் சேவையைப் பெற பயனர்கள் “7217711814” என்ற எண்ணை மொபைலில் சேமித்து, வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும். மொபைல் எண் சரிபார்ப்புக்குப் பிறகு, ஒருங்கிணைந்த சட்ட ஆலோசனைகளைத் தனிநபர்கள் பெற முடியும். தற்போது சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தாலும், விரைவில் இது முழுமையான மக்கள் சேவையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.