தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த விதிகளின்படி, வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லாவிட்டாலோ அல்லது அதில் போதிய பணம் இல்லாவிட்டாலோ, வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த நேரிடும். இது நவம்பர் 15, 2025 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வந்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் சரியாக இயங்காத நிலையில், வாகன ஓட்டிகள் ரொக்கமாகப் பணம் செலுத்த விரும்பினால், அவர்கள் வழக்கமான டோல் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு (2x) தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு சுங்கச்சாவடியில் சாதாரணக் கட்டணம் ₹100 எனில், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக ₹200 செலுத்த வேண்டியிருக்கும். இது பணப் பரிமாற்றத்திற்காகச் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சுங்கச்சாவடி மாற்றங்கள்
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், புதிய விதிகளில் UPI மூலம் பணம் செலுத்துபவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் UPI மூலம் பணம் செலுத்தினால், அவர்கள் வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு மட்டும் செலுத்தினால் போதுமானது. அதாவது, ₹100 கட்டணம் உள்ள இடத்தில் ரொக்கமாக ₹200 செலுத்த வேண்டிய நிலையில், UPI மூலம் ₹125 மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த மாற்றமானது மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைப் பயன்படுத்துவதை அதிகரிப்பதுடன், சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தவிர்க்க உதவும். வாகன ஓட்டிகள் தேவையற்ற கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் தங்கள் வாகனங்களில் முறையான மற்றும் போதுமான இருப்புடன் கூடிய ஃபாஸ்டேக் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டோல் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஃபாஸ்டேக் (FASTag) இல்லையென்றால் இனி 2 மடங்கு கட்டணம்!


