செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதால், ஏஐ சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக அமெரிக்க ஏஐ நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாவிட்டாலும், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் என்விடியா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் எளிதாகப் பங்கு பெறலாம். அமெரிக்காவின் NASDAQ மற்றும் S&P 500 குறியீடுகளைப் பின்பற்றும் இத்தகைய மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக AI துறை சார்ந்த பங்குகளில் (என்விடியா, மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், ஆல்பபெட், மெட்டா) முதலீடு செய்து, அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன.
அதிக AI முதலீட்டைக் கொண்ட முன்னணி ஃபண்டுகள்
மிரே அசெட் NYSE FANG+ ETF போன்ற ஃபண்டுகள் அதிகபட்ச ஏஐ முதலீட்டைக் கொண்ட டாப் 7 மியூச்சுவல் ஃபண்டுகளில் முன்னிலையில் உள்ளன. இந்த ஃபண்ட், AI தொடர்புடைய பங்குகளில் 79.23 சதவீதம் முதலீடு செய்துள்ளது. இது ஒரு ஆண்டில் 53.04 சதவீதமும், மூன்று ஆண்டுகளில் 345.15 சதவீதமும் லாபம் தந்துள்ளது. AI துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இதைத் தவிர, மிரே அசெட் S&P 500 டாப் 50 ETF 63.86 சதவீதம் AI தொடர்புடைய பங்குகளில் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளில் 160.14 சதவீதம் லாபம் அளித்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் NASDAQ-100 ETF (53.38% AI முதலீடு) மூன்று ஆண்டுகளில் 145.33 சதவீதம் லாபம் தந்துள்ளது. ICICI ப்ரூடென்ஷியல் NASDAQ 100 இன்டெக்ஸ் ஃபண்ட் 52.90 சதவீதம் AI சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
முதலீட்டுக்கான எளிமையான வழி
இந்த ஃபண்டுகள் அனைத்தும் பேசிவ் (Passive) ஃபண்டுகள் என்பதால், அவற்றின் செலவு விகிதம் குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு (5-10 ஆண்டுகள்) இது ஒரு சிறந்த வழிமுறையாகும். மேலும், பராக் பரிக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 11.50 சதவீதம் AI பங்குகளையும், SBI போகஸ்ட் ஃபண்ட் ஆல்பபெட் நிறுவனத்தில் 7.94 சதவீதம் முதலீடு செய்துள்ளன. இந்திய முதலீட்டாளர்கள் SIP (Systematic Investment Plan) மூலம் ₹500 முதல் இந்த ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடங்கலாம்.


