சின்னதா தொழில் தொடங்க ஆசையா? கையில் பணம் இல்லையா? அரசே கொடுக்கும் கடன், யூஸ் பண்ணிக்கோங்க!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்கள் மக்களை நிதி ரீதியாக பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. சிறு தொழில்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், சொந்தமாக சிறுதொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவோ விரும்புவோருக்கு நிதியுதவி வழங்கப்படும்.

எளிதாக கடன் கிடைக்கும்!
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி (முத்ரா) மூலம் மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டம் கடன்கள் மட்டுமில்லாமல், செயல்பாட்டு மூலதனம் மற்றும் ஓவர் டிராஃப்ட் போன்ற வசதிகளையும் வழங்குகிறது. சிறு வணிக உரிமையாளர்கள் தங்கள் அன்றாட தேவைகளில் நிதி ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து தொழில் நடத்துவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

யாரெல்லாம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்திய குடிமகனும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஏற்கெனவே வேலையில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. சிறு கடைக்காரர்கள், கைவினைஞர்கள், தெருவோர வியாபாரிகள், தொடக்க நிலை தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். வணிகத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்கு இருந்தால் பெண்களும் இந்தத் திட்டத்தில் பயனடையலாம்.

எந்த வணிகங்கள் கடன் பெற தகுதியுடையவை?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் பல வகையான வணிகங்களை உள்ளடக்கியது. ஆட்டோ மற்றும் இ-ரிக் ஷாக்கள், டாக்சிகள், சலூன்கள், மருந்தம், தையல் மையங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் போன்ற சேவை வணிகங்கள் இதில் அடங்கும். அதோடு, சிறிய அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தக வணிகங்களும் இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன.

விவசாய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு வாய்ப்பு!
இந்த திட்டம் நகரங்களுக்கு மட்டுமல்லாமல், கிராமங்களில் உள்ள மக்களுக்கும், விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும் முத்ரா கடன் வழங்கப்படுகிறது. பால் பண்ணை, கோழி வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல், மீன்பிடித் தொழில், தேனீ வளர்ப்பு மற்றும் பிற விவசாய தொழில்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நீங்கள் நிதியுதவி பெறலாம்.

முத்ரா கடன்களின் வகைகள்!
முத்ரா யோஜனா திட்டம் மூன்று வெவ்வேறு வகைகளில் கடன்களை வழங்குகிறது. ஷிஷு பிரிவின் கீழ் சிறு தொழில்களை தொடங்குவதற்கு கடன் வழங்கப்படும். கிஷோர் பிரிவின் கீழ் ஏற்கனவே ஓரளவு முன்னேறியவர்களுக்கு கடன் டைக்கும். பெரிய அளவிலான வணிக விரிவாக்கத்திற்காக தருண் தருண் பிரிவின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் வணிகங்கள் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெறுவதை இந்த வகைப்பாடு உறுதி செய்கிறது.