யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்… புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி!

ஸ்மார்ட்போனை point of sale என்ற விற்பனை இயந்திரத்தின் அருகே தொட்டு வைப்பதன் மூலம் சில விநாடிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இணையதள வசதி மற்றும் யுபிஐ இல்லாமலேயே பணப் பரிமாற்றம் செய்வதற்கான புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

தற்போது வரை நாம் ஒரு கடையில் அல்லது வணிக வளாகத்தில் UPI மூலம் பணம் செலுத்த வேண்டுமென்றால், ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கட்டாயமாகத் தேவைப்படுகிறது. மேலும் கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற ஏதேனும் ஒரு செயலியைத் திறந்து, கியூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, PIN எண்ணை உள்ளீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘டேப் அண்ட் பே’ வசதி மூலம், ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், எந்தவொரு UPI செயலியை திறக்காமலேயும் மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும்.

NFC தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த வசதியில், ஸ்மார்ட்போனை point of sale என்ற விற்பனை இயந்திரத்தின் அருகே தொட்டு வைப்பதன் மூலம் சில விநாடிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும்.

நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத மலைப் பகுதிகள், கிராமப்புறங்கள், நிலத்தடி வணிக வளாகங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த ஆஃப்லைன் பரிவர்த்தனை முறை பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5,000 ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு PIN எண் தேவையில்லை என்பதால் நேரம் மிச்சப்படுவதோடு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரமும் மேலும் வலுவடையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.