பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி?

Jan Samarth online Portal 16 Government Loan Schemes : 2026 ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, இத்தளத்தின் மூலமாக சுமார் 54.10 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

என்றைக்காவது சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை, விருப்பம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கான முதலீட்டை எப்படி உருவாக்குவது, கடன் எங்கு வாங்குவது என்ற தயக்கத்திலேயே பல கனவுகள் முடங்கிப் போகின்றன. குறிப்பாக, வங்கிகள் கேட்கும் ‘கியாரண்டி’ எனப்படும் உத்தரவாதங்களை நம்மால் தர முடிவதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவே, சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசு ‘ஜன் சமர்த்’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஜன் சமர்த் இணையதளம் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்: பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாக ஜன் சமர்த் எனும் டிஜிட்டல் தளத்தை அரசு உருவாகியுள்ளது. எளிய தொழில்நுட்ப நடைமுறைகள் மூலம் நிறுவனக் கடன்களைப் பெறுவதை எளிதாக்கும் ஒற்றைச் சாளர தளமாக இது விளங்குகிறது. விவசாயம், வணிகம், வீட்டுவசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாழ்வாதாரம் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.

இத்தளத்தின் மூலம் 16 மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்க முடியும். அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம், இ-கிசான் உபஜ் நிதி, வீட்டுவசதித் திட்டம், கிசான் கடன் அட்டை, சூரியசக்தி மேற்கூரைத் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம், முத்ரா கடன் திட்டம், பிரதமரின் ஸ்வநிதி திட்டம் போன்றவை இதில் அடங்கும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதியைச் சரிபார்த்து, எளிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பொருத்தமான திட்டங்களைத் தேர்வு செய்யலாம். மேம்பட்ட தொழில்நுட்பப் பகுப்பாய்வு மூலம் விவரங்கள் தானாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன. வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையின்றி, இணையவழியிலேயே கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெறவும், விண்ணப்பங்களின் நிலையை கண்காணிக்கவும் இது வழிவகை செய்கிறது.

2026 ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, இத்தளத்தின் மூலமாக சுமார் 54.10 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிகள் மூலம் 49.55 லட்சம் பயனாளிகளுக்கு 2.76 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கு டிஜிட்டல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்யம், தனித்துவ அடையாள ஆணையம், வருமான வரித்துறை, ஜிஎஸ்டி போன்ற அரசு தரவுத்தளங்களின் ஒருங்கிணைப்பு, வேகமான கடன் வழங்கலை உறுதி செய்கிறது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண் தொழில்முனைவோர், விவசாயிகள், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் ஜன் சமர்த் இணையதளம் முக்கியப் பங்கு வகிக்கிறது.