செப்டம்பர் 15 முதல்… சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை 4,000 குவிண்டாலிலிருந்து 2,000 குவிண்டாலாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் சர்க்கரை வியாபாரிகளுக்கு 4,000 குவிண்டால் கையிருப்பு வரம்பு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சர்க்கரைப் பதுக்கலையும் ஊக வணிகத்தையும் தடுக்கும் நோக்கில் இந்த வரம்பு தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

திருத்தப்பட்ட விதிகளின்படி, செப்டம்பர் 15 முதல் வியாபாரிகள், சர்க்கரையைக் கொள்முதல் செய்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் இருப்பில் வைத்திருக்கக் கூடாது. நாடு முழுவதும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் 2,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரையை கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது.

இந்த புதிய கையிருப்பு வரம்பில் இருந்து கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து 4,000 குவிண்டால் கையிருப்பு வரம்பு நீடிக்கும். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரையைப் பெற்று, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் முக்கிய மையமாக கொல்கத்தா செயல்படுவதால் இந்த சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள், முகவர்கள் மற்றும் வர்த்தகர்களின் இருப்புகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதிகப்படியான இருப்பு வைத்திருத்தல் மற்றும் விற்பனை முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக, சமீபத்திய நாட்களில் ஆலை சர்க்கரையின் விலை சுமார் 20% வரை குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சில்லறை விற்பனை விலையும் குறையத் தொடங்கியுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் சென்று சேர்வதையும் உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.