மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் கைபேசி உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 21 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் இந்தியா ரூபாய் 18,900 கோடி மதிப்பிலான கைபேசிகளை தயாரித்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூபாய் 4.10 லட்சம் கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாட்டின் கைபேசி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2000 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) உற்பத்தி வளர்ச்சியில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. இதன் மூலம், ஒட்டுமொத்த உள்நாட்டு கைப்பேசி உற்பத்தி அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் கைபேசி தேவையில் 97 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியே பூர்த்தி செய்கிறது. எஞ்சிய 3 சதவீத தேவையை தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைபேசிகள் நிறைவு செய்கின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் 30 சதவீத கைபேசிகள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 2014 -15 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கைபேசிகளின் மதிப்பு ரூபாய் 1,556 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில், நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் மதிப்பு 7,500 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் காரணமாக கைபேசி ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கைபேசிகள் அதிக அளவில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய சந்தைகளுக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகள் கணிசமான அளவு ஏற்றுமதி ஆகின்றன.
பெரிய அளவிலான மின்னணு சாதனங்களுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது, இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.




