125 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ‘கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கத்தாரை சேர்ந்த அந்நாட்டின் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான ‘கே.எஃப் குளோபல் அண்டு இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உரம், உணவு, ஆரோக்கியம், சுரங்கம், ட்ரோன், காலணி போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த வணிகத்தில் கோத்தாரி நிறுவனமான KICL ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை, அதாவது 70.56 லட்சம் பங்குகளை வாங்க ‘கே. எஃப் குளோபல் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்’ ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான அனுமதியை KICL இயக்குனர் குழு ஏற்கனவே அளித்துள்ளது. கத்தாரின் முன்னாள் அமைச்சரும் தோகா வங்கி மற்றும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனருமான பலாஹ் ஜஸ்ஸிம் ஜே.எம். அல்தானிக்கு சொந்தமான நிறுவனம் கே.எஃப் குளோபல்.
கத்தாரில் கே.எஃப் குளோபலுடன் இணைந்து, புதிய நிறுவனத்தை துவக்கவும் கோத்தாரியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.புதிய நிறுவனத்தில் கோத்தாரின் பங்கு 70% இருக்கும்.
மேலும், ‘பீனிக்ஸ் கோத்தாரி புட்வேர்’ நிறுவனம் பெரம்பலூரில், தன் முதலாவது தோல் அல்லாத காலணி தயாரிப்பு நிறுவனத்தை அமைத்து வருகிறது. கத்தார் மன்னர் குடும்ப நிறுவனத்தின் புதிய முதலீடு தங்கள் வர்த்தக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என இந்நிறுவனம் நம்புகிறது. தவிர, கோத்தாரி நிறுவனம் சென்னையில் தனது முதலாவது கிக்கர்ஸ் பிராண்ட் காலனி ஷோரூமை திறந்துள்ளது. பிரான்சின், ‘ராயர்’ குழுமத்துடன் 30 ஆண்டுகால உரிமம் பெற்று, ‘கிக்கர்ஸ்’ பிராண்ட் காலணிகளை இந்தியாவில் கோத்தாரி நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
மேலும் இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாளம், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ‘கிக்கர்ஸ்’ காலணி விற்பனைக்கும் இந்த உரிமம் பயன்படும், என கோத்தாரி நிறுவனம் தெரிவித்துள்ளது.




