தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds) விற்பனையை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் ஆலோசனைப்படி, இந்தப் பத்திரங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது வழக்கம். சில நாட்கள் மட்டுமே, இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அதனை அவர்கள் பங்குச் சந்தையில் விற்கவும், வாங்கவும் முடியும்.
தனி நபர்கள் இந்த தங்க பத்திரங்களில், குறைந்தது ஒரு கிராம் தங்கம் முதல் அதிகபட்சமாக நான்கு கிலோ வரை முதலீடு செய்ய முடியும். அவ்வப்போது வெளியிடப்படும் பத்திரங்களுக்கான விலை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறான பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி உண்டு. இதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், மூலதன ஆதாய வரி விலக்கு உண்டு. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். ஆனால், முதலீடு செய்யும் நபர் 5 வருடங்களுக்குப் பிறகு விற்பனை செய்யலாம். வேறு வகை கடன்கள் வாங்கும் போது இந்த தங்க பாத்திரங்களை பிணையாக பயன்படுத்த முடியும்.
பத்திரங்களின் முதிர்வு காலத்தில், தங்கத்தின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு தொகையை திரும்ப பெறலாம். இந்த பலன்களுக்காக தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது, பாதுகாப்பான நன்மை தரக்கூடிய வழிமுறையாக கருதப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கத்தில் ஆண்டு தோறும் 10 முதல் 14 தவணைகள் வரை தங்க பத்திரங்களை வெளியிட்டது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் நான்கு முறை மட்டுமே வெளியிடப்பட்டது. அதே நேரம் நடப்பு 2024-25 ஆம் நிதி ஆண்டில் இதுவரை தங்க பத்திர வெளியீட்டை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
இதுவரை 67 முறை தங்க பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இந்த முதலீட்டை கொண்டு 146 டன் தங்கம் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை கொண்டு தங்கம் வாங்கப்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், குறிப்பிட்ட அளவில் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி வருகிறது. இந்த சூழலில், தங்கம் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, முதலீட்டாளர்களுக்கு முதிர்வின் போது 2.5 % வட்டியும் கொடுக்க வேண்டும். இந்நிலையில், மேலும் பத்திரங்களை வெளியிட்டால் அரசுக்கு நிதிச் சுமை ஏற்படும் என்று அரசு கருதுகிறது. எனவே தான் தங்க பத்திரங்கள் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய குடும்பங்கள், சுமார் 27 ஆயிரம் டன் தங்கத்தை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் அதிகாரப்பூர்வ இருப்பை விட அதிகம். இந்தியாவின் தங்க இருப்பு, 2022 செப்டம்பர் இறுதியில் 785 மெட்ரிக் டன்னிலிருந்து, 2024 மார்ச் இறுதியில் 822 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
மக்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதை தவிர்க்கவும், அதே சமயம் தங்க முதலீட்டுக்கான அனைத்து நன்மைகளையும் பெறவும், தங்க பத்திரங்களை தொடர்ந்து வெளியிடுவது நல்லது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.




