மெசேஜிங் செயலியை உருவாக்கி ரூ.416 கோடிக்கு விற்ற இளைஞர்.

இன்றைய இளைஞர்கள், படித்து முடித்தவுடன் பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பெறும் வேலைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல், சொந்தமாக தொழில் தொடங்கவே பெரிதும் விரும்புகின்றனர்.

மேலும், சமீபத்திய ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், இளம் இந்திய தொழில்முனைவோர், வணிக உலகில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

முக்கியமாக,அவர்களின் அறிவு மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். ஆன்லைன் படிப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம், அவர்கள் ஸ்டார்ட்அப்-கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்கத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை எளிதாக பெறுகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகரைச் சேர்ந்த கிஷன் பகாரியா “Texts.com” என்ற மெசேஜிங் செயலியை உருவாக்கினார். இந்த செயலி உங்களுக்குப் பிடித்த மெசேஜ் செயலிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க ஒரு பிரத்யேக தளத்தை வழங்குகிறது. இது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான சோசியல் மீடியா செயலிகளை இடைமுகத்தின் கீழ் சிரமமின்றி ஒருங்கிணைக்கிறது. எதிர்காலத்தில் இந்த செயலியை மேலும் மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளதாகவும் தெரிகிறது.

கிஷன் பகாரியா, ஒரு தொழில்நுட்ப மேதை. அவர் ஆன்லைனில் பெற்ற அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி ஒரு அசாதாரண பயணத்தைத் தொடங்கினார். கற்றல் மீதான அவரது ஆர்வம் மற்றும் புதுமையான அணுகுமுறை அவரை ஒரு செயலியை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் அவர் வேர்ட்பிரஸ்ஸின் (WordPress) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிற்கு, தான் தொடங்கிய Texts.com செயலியை ரூ.416 கோடிக்கு விற்றார்.