உலக நாடுகளின் நாணய வலிமை

சர்வதேச அளவிலான வர்த்தக நடவடிக்கைகளின் உயிர்நாடி நாணயம். இது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலை பிரதிபலிப்பதுடன், வலிமை, ஸ்திரத்தன்மை, வலுவான நிதி ஆரோக்கியத்திற்கு தக்க சான்றாகும்.

நாணயம் மீதான மதிப்பு உயரும்போது, அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையும் உயர்கிறது. இதனால் முதலீடுகளை எளிதாக ஈர்க்கவும், சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்தவும் முடியும்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கிலும் உள்ள 180 நாடுகளின் நாணயங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதில் சில நாணயங்கள் பிரபலமானவை என்பதுடன், அதன் பயன்பாடு என்பது பரவலாக உள்ளது.

உலகின் வலிமையான நாணயங்களின் பட்டியலை சமீபத்தில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்த பட்டியலில் குவைத் தினார் முதல் இடத்தில் உள்ளது.

1961ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உலகின் மதிப்பு மிக்க நாணயமாக தினார் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு குவைத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை, கச்சா எண்ணெய் வளம் ஆகியவை முக்கியமானவை.

அறிமுகத்தின்போது ஒரு தினாருக்கு 13 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது ரூபாய் 270 ஆக உயர்ந்துள்ளது. அது போன்று ஒரு தினார் என்பது அமெரிக்க மதிப்பில் 3.35 டாலராக உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பக்ரைன் தினார், ஓமன் ரியால், ஜோர்டான் தினார், ஜிப்ரால்டர் பவுண்டு, பிரிட்டன் பவுண்டு, கேமன் தீவு டாலர், ஸ்விஸ் பிராங்க், யூரோ ஆகியவை உள்ளன.

சுவாரசிய நிகழ்வாக, உலக அளவில் எல்லோரும் விரும்பும் அமெரிக்க டாலர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்திய ரூபாய் இந்த பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. சர்வதேச நிதியத்தின் வலைத்தளத்தில், ஒரு அமெரிக்க டாலருக்கான ரூபாயின் மதிப்பு சுமார் 83 ஆகும். ஏற்றுமதிக்கான தேவையை உலக அளவில் அதிகரிப்பதன் மூலம், ஒரு நாட்டின் வருவாய் உயரும். இது நாணயத்திற்கான தேவையை அதிகரிக்கும் என்பதுடன், அதன் மதிப்பையும் சர்வதேச அளவில் உயர்த்தும்.