இந்தியாவில், கடந்த 1972ல் நிரந்தர கணக்கு எண்(PAN) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தனித்துவமான 10 இலக்கு எண்ணைக் கொண்ட பான் கார்டு, வரி செலுத்தல், வருமான வரிப் பிடித்தல் போன்ற, தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே, வருமானவரி தாக்கல் செய்வதற்கு மட்டும் தான் என்ற நிலை மாறிவிட்டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்கியமோ அதேபோல், அனைத்து நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனால் தான், வருமானவரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, 8.62 கோடியாக இருந்த போதிலும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்கியுள்ளனர்.
இந்தியாவில் பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைப்பதற்கும், வரி வசூல் தொடர் கண்காணிப்பு அமைப்புக்கும், இது உதவும். இதற்காக, 1300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2017-18 முதல் பான் கார்டுகளில், QR கோடு ஒரு பகுதியாக உள்ளது. பான் 2.0 – வின் கீழ், இது பான் தரவு தளத்திலிருந்து, சமீபத்திய தரவைக் காண்பிக்கும், டைனமிக் QR குறியீட்டுடன் மேம்படுத்தப்படும். QR குறியீடு பான் விபரங்களைச் சரிபார்த்து, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. விவரங்களைச் சரிபார்க்க, பிரத்யேக QR ரீடர் பயன்பாடு உள்ளது.
ஸ்கேன் செய்யும் போது, புகைப்படம், கையொப்பம், பெயர், பெற்றோரின் பெயர்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் காட்டுகிறது.
ஏற்கனவே,பான் கார்டு வைத்திருப்பவர்கள், மேம்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் புதிய பான் கார்டுக்கு, புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. தற்போதைய செல்லுபடியாகும் பான் கார்டுகள் வைத்திருப்பவர்கள் புதுப்பித்தல் அல்லது திருத்தம் கோரி புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதனால், உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை மாற்றாமலேயே பான் 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீட்டைக் கொண்ட புதிய அட்டையைப் பெற முடியும்.
உலக நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், தனிநபர் அடையாள அட்டை என்ற சமூக பாதுகாப்பு எண் (SSN), தனிப்பட்ட வரி செலுத்துவோர் எண்(UTR) போன்றவை அனைத்து விதமான காப்பீடு, பணப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஒரு தனிநபரின் அனைத்து விதமான நிதி மற்றும் அது சார்ந்த பரிவர்த்தனைகள், வருமான வரி என அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது.
அதேபோல்,பான் 2.0 திட்டம் தடையற்ற டிஜிட்டல் செயல்முறைகள் மற்றும் வலுவான தரவு பாதுகாப்புடன், வரி செலுத்துவோர் பதிவை மேம்படுத்த, உலகளாவிய தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இது தரம், பாதுகாப்பு மற்றும் சேவை மேலாண்மைக்கான, முக்கிய ISO சான்றிதழ்களுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
பான் 2.0 நடைமுறையில் செயல்படுத்தப்பட, இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இந்த புதிய பான் அட்டையை பெறுவதன் மூலம், பான் தொடர்பான அனைத்து சேவைகளும் மிக விரைவாக வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும். டேட்டா சார்ந்த பிழைகள் அனைத்தும் குறைக்கப்படும். தற்பொழுதுள்ள பான் கார்டுகளுக்கு இலவசமாகவே அப்கிரேட் செய்யப்படும்.
உலகளாவிய, சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவின் வரி முறையை நவீனமாக்கி, ஒருங்கிணைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான அனுபவத்தை பெறலாம்.




