Startup நிறுவனங்கள் தொடங்குவதில், தமிழகம் தொடர்ந்து சாதனை

தமிழகத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் விளைவாக, 23-12-2024 நிலவரப்படி தமிழகத்தில் 10,005 நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்-களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து 10,000 என்ற இலக்கை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும். 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.

தமிழக அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது, நிதி அளிப்பது, வழிகாட்டுதல் என பல்வேறு செயல்களை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என StartUpTN அமைப்பின் இயக்குநர் சிவராஜா ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் மையங்கள் மற்றும் சென்னையில் ஒரு மெட்ரோ ஹப் மூலம் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு செழுமைப்படுத்தி வருவதாகவும், இது ஸ்டார்ட்அப்கள் வளர வலுவான உள்கட்டமைப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் ஆதரவுடன், இளைஞர்களிடம் தொழில் முனைவு ஆர்வத்தை உருவாக்கி, அதை ஊக்குவிப்பதன் மூலமாக, தமிழ்நாடு முன்னணி ஸ்டார்ட்அப் மையமாக மாறி வருகிறது.சென்னையில் மட்டுமல்லாமல், 2ம் கட்ட, 3ம் கட்ட நகரங்களிலும் ஸ்டார்ப் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதன் மூலமாக தொழில்முனைவோரின் வளர்ச்சியை வேகப்படுத்த முடிந்துள்ளது. மேலும் Department for Promotion of Industry and Internal Trade- இல் பதிவு செய்யப்பட்ட 10,005 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 4,925 நிறுவனங்கள் பெண்களின் தலைமையில் இயங்கி வருவது பாராட்டத்தக்கது.