தேவைப்படும் நேரத்தில், பி.எஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி, விரைவில் அறிமுகம்

பி.எஃப் பணத்தை இனி ஏ.டி.எம் மூலமாக எடுப்பதற்கான வசதியை நடைமுறைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான தகவல் தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், EPFO 3.0 என்ற அடிப்படையில், தனது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5-6 மாதங்களாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ.டி.எம் கார்டு போன்ற ஒரு அட்டையை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளோம். வங்கி போன்ற வசதியை உருவாக்கவும், முயன்று வருகிறோம். மக்கள் தங்கள் சொந்த பணத்தை பெறுவதற்கு எதற்காக அனுமதி வேண்டும்? இந்த கேள்விக்கு பின்னணியில் தான் இந்த திட்டம் உருவானது” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பணத்தை பெறுவதற்கான உச்சவரம்பு தீர்மானிக்கப்பட்ட பின்னர், பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டையை பயன்படுத்தி ஏ.டி.எம்மில் பணம் எடுப்பது போல எடுத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) தற்போதுள்ள 12 சதவீத உச்சவரம்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை பயனாளிகள் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் ஊழியரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் தக்க வைப்புத்தொகையில் 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். பணியாளரின் முழு பங்களிப்பும் இதற்கு செல்கிறது.