இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் UPI (Unified Payments Interface) தற்போது உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில், UPI பரிவர்த்தனைகளின் தினசரி மதிப்பும், எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் ஒரு நாளின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹75,743 கோடி இருந்த நிலையில், ஆகஸ்டில் அது ₹90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 127 மில்லியனிலிருந்து 675 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அடிப்படையிலான தரவுகளும் சுவாரஸ்யமாக உள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும், Telangana மாநிலம் ₹1.26 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்து, இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. இது, UPI மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடியாக பங்களிக்கிறது என்பதற்கான சான்று.
NPCI வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 2025க்குள் UPI மாதாந்தர பரிவர்த்தனை எண்ணிக்கை 19.47 பில்லியனை எட்டியது; மொத்த மதிப்பு ₹25.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டை விட 35% பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் 22% பரிவர்த்தனை மதிப்பில் வளர்ச்சியை குறிக்கிறது.
இந்தியாவின் UPI முறையை IMF கூட பாராட்டியுள்ளது. உலகின் வேகமான பண பரிமாற்ற அமைப்பாக இந்தியா திகழ்கிறது. நேரடி, பாதுகாப்பான, குறைந்த செலவிலான பண பரிவர்த்தனை வசதியால் இந்தியாவின் பொருளாதாரமும், சர்வதேச நிதி தாக்கமும் வலுப்பெற்று வருகிறது.
இது, இந்தியாவின் டிஜிட்டல் எகானமி வளர்ச்சி உலகில் முன்னணி இடத்தை பிடிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.




